நிற்பதுவே... நடப்பதுவே...!

 


நிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம் 

சொற்பனந் தானோ? - பல தோற்ற மயக்கங்களோ?

கற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்

 அற்பமாயைகளோ ? - உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ ?


வானகமே, இளவெயிலே, மரச்செறிவே, நீங்களெல்லாம் 

கானலின் நீரோ ?- வெறுங் காட்சிப் பிழைதானோ ?

போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்

 நானுமோர் கனவோ ?-  இந்த ஞாலமும் பொய்தானோ ?


கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் 

கோலமும் பொய்களோ ? - அங்குக் குணங்களும் பொய்களோ ?

சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,

சோலை பொய்யாமோ ? - இதைச் சொல்லொடு சேர்ப்பாரோ  ?


 காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம் காண்ப மன்றோ?

 வீண்படு பொய்யிலே- நித்தம் விதிதொடர்ந் திடுமோ ?

காண்பதுவே உறுதிகண்டோம் காண்பதல்லால் உறுதில்லை

காண்பது சக்தியாம்- இந்தக் காட்சி நித்தியமாம்.

-மகாகவி பாரதியார்

Comments