பாயும் ஒளி நீ எனக்கு !
பாயும் ஒளி நீ யெனக்கு, பார்க்கும் விழி நானுனக்கு,
தேயும் மது நீ யெனக்கு, தும்பியடி நானுனக்கு.
வாயுரைக்க வருகுதில்லை, வாழி நின்றன் மேன்மையெல்லாம்;
தூயசுடர் வானொளியே ! சூறையமுதே ! கண்ணம்மா !
வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வைரம் நானுனக்கு;
காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடி
மாணுடைய பேர ரசே ! வாழ்வு நிலையே ! கண்ணம்மா !
வான மழை நீ யெனக்கு, வண்ண மயில் நானுனக்கு;
பான மடி நீ யெனக்கு, பாண்டமடி நானுனக்கு;
ஞான வொளி வீசுதடி, நங்கை நின்றன் சோதிமுகம்,
ஊனமறு நல்லழகே ! ஊறு சுவையே ! கண்ணம்மா !
வெண்ணிலவு நீ யெனக்கு, மேவு கடல் நானுனக்கு;
பண்ணு சுதி நீ யெனக்கு, பாட்டினிமை நானுனக்கு;
எண்ணியெண்ணிப் பார்த்திடலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;
கண்ணின் மணி போன்றவளே ! கட்டியமுதே !கண்ணம்மா !
வீசு கமழ் நீ யெனக்கு, விரியுமலர் நானுனக்கு;
பேசுபொருள் நீ யெனக்கு, பேணுமொழி நானுனக்கு;
நேசமுள்ள வான்சுடரே ! நின்னழகை யேதுரைப்பேன் ?
ஆசை மதுவே ! கனியே ! அள்ளு சுவையே கண்ணம்மா !
காதலடி நீ யெனக்கு, காந்தமடி நானுனக்கு;
வேதமடி நீ யெனக்கு, வித்தையடி நானுனக்கு;
போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே !
நாதவடி வானவளே ! நல்லஉயிரே கண்ணம்மா !
நல்லவுயிர் நீ யெனக்கு, நாடியடி நானுனக்கு;
செல்வமடி நீ யெனக்கு, சேமநிதி நானுனக்கு;
எல்லையற்ற பேரழகே ! எங்கும் நிறை பொற்சுடரே !
முல்லைநிகர் புன்னகையாய் ! மோதுமின்பமே ! கண்ணம்மா !
- மகாகவி பாரதியார்
Comments
Post a Comment